கோலாலம்பூர், ஜூலை 4 - அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் (ஏ.ஜி.) 2/2024 அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் 11 அமைச்சுகள் சம்பந்தப்பட்ட 4,197 கோடி வெள்ளி மதிப்பிலான திட்டங்கள் தணிக்கைச் செய்யப்பட்டன.
மத்திய அரசின் கீழுள்ள அமைச்சுகள், துறைகள் மற்றும் துணை நிறுவனங்களின் திட்டங்களை இந்த தணிக்கை உட்படுத்தியிருந்தாகத் தலைமை ஆடிட்டர் ஜெனரல் டத்தோ வான் சுராயா வான் முகமது ராட்ஸி கூறினார்.
ஒன்பதாவது மலேசியத் திட்டம் தொடங்கி 12வது மலேசியத் திட்டம் வரையிலான மேம்பாட்டுப் பணிகளை இந்த தணிக்கை ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தது என்று அவர் தெரிவித்தார்.
இந்த தணிக்கையின் போது பல்வேறு காரணங்களினால் அரசாங்கத் திட்டங்களின் அமலாக்கத்தில் பல பலவீனங்கள் காணப்படுவது கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்டத் தரப்பினரின் முறையான கண்காணிப்பின்மை, அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, முழுமை பெறாத தரவுகள், பணிக் கொள்கை மற்றும் செயல்முறையில் பலவீனம் ஆகியவை அந்த காரணரங்களாகும் என்றார் அவர்.
இந்த பலவீனங்கள் காரணமாக திட்டங்கள், நடவடிக்கைகள் அல்லது குத்தகைப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத சூழல், பணியில் தரமின்மை மற்றும் செலவின அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனால் அரசாங்கம் செலவிட்ட பணத்திற்கு ஏற்ற பலன் கிட்டவில்லை என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் ரிவர் ஆஃப் லைப் (ஆர்ஓஎல்) திட்டங்கள், அகண்ட அலைவரிசை மற்றும் தொலைத் தொடர்பு மேலாண்மை மற்றும் கிழக்குக் கரை பொருளாதார பிராந்தியம் ஆகிய திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விவகாரங்களை எழுப்பியுள்ளார்.


