கோலாலம்பூர், ஜூன் 6 - ஜைன் ரய்யான் அப்துல் மத்தின் என்ற சிறுவனின் படுகொலை தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக அவனது பெற்றோருக்கு எதிரான தடுப்புக் காவலை நீட்டிக்கக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
அத்தம்பதியருக்கு எதிரான தடுப்புக் காவல் நாளையுடன் முடிவடைவதால் காவலை மேலும் நீட்டிக்க தமது தரப்பு விண்ணப்பம் செய்யும் என்று சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.
நாங்கள் தடுப்புக் காவலை நாளை நீட்டிப்போம் என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.
முன்னதாக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அச்சிறுவனின் பெற்றோர் கடந்த ஜூன் 1 முதல் நாளை வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவின் டாமன்சரா டாமாய், இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஓடையில் ஜைன் ரய்யானின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்டிஸம் குறைபாடு கொண்ட அச்சிறுவனின் உடல் மீது மேற்கொள்ளப்பட்டச் பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. தற்காத்துக் கொள்ளப் போராடியதற்கான அறிகுறியாக அச்சிறுவனின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் காணப்பட்டன.


