ஷா ஆலம், ஜூன் 6 - சிலாங்கூர் அரசின் ஆக்ககரமான வியூகத்தின் வழி மாநிலத்தில் பரம ஏழ்மையை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் ஒழித்துவிட முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதியாக நம்புகிறார்.
சிலாங்கூரில் 250க்கும் குறைவான குடும்பங்கள் பரம ஏழைகள் பிரிவில் இருப்பதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று அமிருடின் கூறினார்.
சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தில் இருந்து அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்திர உதவியாக 300 வெள்ளி வரை உபரி நிதியை வழங்குமாறு மாநிலப் பொருளாதார திட்டமிடல் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
மாநில அரசின் பல முன்னெடுப்புகளுடன் நாங்கள் செயல்படுத்திய வியூகங்களைப் பயன்படுத்தி மிக வறிய நிலையை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் ஒழிக்க முடியும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் நடைபெற்ற பிளாட்ஸ் கடனுதவித் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் அவர் இவவாறு கூறினார்.
எனினும், கடும் வறுமையை ஒழிப்பதற்கான இலக்கை அடைந்த பிறகு ஏழ்மையை ஒழிப்பதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சி முற்றுப் பெற்று விடாது. இது ஒரு தொடர் நடவடிக்கையாகவே இருந்து வரும் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜூலைக்குள் ஏழ்மை நிலையை ஒழிப்பதோடு நாம் திருப்தி அடைந்து விட்டதாகப் பொருள்படுமா என்றால், நிச்சயமாக இல்லை. வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தமில்லை. ஏனெனில் மக்கள் அவ்வப்போது இந்த பிரிவில் சேரலாம், வெளியேறலாம். ஆகவே தேவைப்படும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்குத் தொடர்ந்து உதவுவோம் என்றார் அவர்.
ஜூலை மாதத்திற்குள் கடும் வறுமையை ஒழிப்பதை சிலாங்கூர் இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அப்பிரிவில் 861 குடும்பங்கள் உள்ளன என்றும் அமிருடின் கடந்த மே 1 ஆம் தேதி கூறியிருந்தார்.


