மலாக்கா, ஜூன் 5 - இங்குள்ள ஜாலான் துன் அப்துல் ரசாக்-சிம்பாங் தாமான் அயர் குரோ ஹைட்ஸ் பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் சம்பந்தப்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததோடு மற்றொருவர் படுகாயங்களுக்குள்ளானார்.
இரவு 10.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் கண்ணாடித் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த 19 வயதான முஹிபுடின் ஃபித்ரி ஃபாரிட் என்ற அந்த மோட்டார் சைக்கிளோட்டி தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
அந்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நோர் நடாஷா முகமது ஃபைசுல் ( வயது18) தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காரின் ஓட்டுநரான வோங் காங் மின் (வயது 77) என்பவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் நபர் ஓட்டிச் சென்ற யமாஹா 135எல்சி மோட்டார் சைக்கிள் மலாக்கா வரலாற்று மாநகர் மன்ற அலுவலக திசையிலிருந்து அயர் குரோ நோக்கி வந்த வேளையில் பெரேடுவா மைவி கார் மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்திலிருந்து தாமான் ஆயர் குரோ ஹைட் நோக்கி வந்தது முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
தாமான் அயர் குரோ ஹைட்ஸ் சந்திப்பில் கார் நுழைந்த போது தவிர்க்க இயலாமல் காரின் இடது பக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டியவரும் பயணியும் சாலையில் விழுந்தனர் இன்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி.கேமரா இல்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியமளிக்க முன்வருமாறும் கேட்டுக் கொண்ட அவர், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த விபத்து குறித்து விசாரிக்கப்படுகிறது என்றார்.


