ஜோகூர் பாரு, ஜூன் 3- தொலைபேசி மோசடி கும்பலின் சதிவலையில் சிக்கி தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒருவர் 520,000 வெள்ளியை இழந்தார்.
கடந்த மாதம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 46 வயதான அந்த உள்நாட்டு ஆடவர் நேற்று போலீசில் புகார் செய்ததாக ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் சிபி எம். குமார் கூறினார்.
நாட்டின் வட மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர் என தன்னை அடையாளம் கூறிக்கொண்ட நபர் ஒருவரிடமிருந்து தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அந்த நிர்வாக இயக்குநர் தனது புகாரில் கூறியுள்ளதாக அவர் சொன்னார்.
"நாங்கள் மேற்கொண்ட ஒரு சோதனையின் போது உங்கள் பெயரிலான தானியங்கி பணப் பட்டுவாடா கார்டு (ஏடிஎம்) கார்டு கண்டுபிடிக்கப்பட்டது. நீங்கள் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்" என்று அந்த அனாமதேய ஆசாமி நிர்வாக இயக்குநரை மிரட்டியுள்ளார் என இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குமார் தெரிவித்தார்.








