கோலாலம்பூர், மே 29: இங்குள்ள ஹோட்டல் ஒன்றின் முகப்பிடத்தில் பிரமுகர் ஒருவரின் மெய்க்காப்பாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாற்றுத் திறனாளியிடமிருந்து புகார் பெறப்பட்டதை காவல்துறை உறுதிப்படுத்தியது.
காயத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் தாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அவர் வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி என்பதால் புகார்தாரரின் வாக்குமூலம் விரைவில் எடுக்கப்படும் என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
நேற்று பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஒரு ஹோட்டலில் பயணிகளுக்காகக் காத்திருந்தபோது பிரமுகரின் மெய்க்காப்பாளரால் தாம் தாக்கப் பட்டதாகக் கூறி ஒரு மின்- அழைப்பு கார் ஓட்டுநர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த ஆடவர் தம்மைத் தலையில் குத்தியதோடு ஹோட்டல் நுழைவாயிலிருந்து தனது வாகனத்தை நகர்த்தவும் உத்தரவிட்டதாக 46 வயதான ஓட்டுநர் சொன்னார். தாக்கப்பட்ட ஓட்டுநர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


