குவாந்தான், மே 21: சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான கெந்திங்கில் உள்ள பெட்ரோல் நிலை பகுதியில் சமையல் நடவடிக்கையில் ஈடுப்பட்டதன் தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்ட 15 நபர்களில் மொத்தம் 4 பேர் மீது இன்று பெந்தோங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
நான்கு நபர்கள் மீதும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 336 இன் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும், மீதமுள்ளவர்கள் விடுவிக்கப்பட்டு வழக்கில் சாட்சிகளாக இருப்பார்கள் என்றும் பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சய்ஹாம் முகமது கஹர் கூறினார்.
"குற்றம் சாட்டப்படும் நபர்கள் 23 முதல் 24 வயதுடைய ஒரு ஆணும் மூன்று பெண்களும் ஆவர்.
முன்னதாக, 23 முதல் 28 வயதுக்குட்பட்ட 10 ஆண்கள் மற்றும் 5 பெண்களை உள்ளடக்கிய 15 நபர்களை காவல்துறை கைது செய்ததாகக் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார். அவர்கள் பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) விசாரணைக்கு உதவ சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் காவல்துறையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மே 13 அன்று, ஒரு பெட்ரோல் நிலையத்தில் சமையல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 50 வினாடி வீடியோ கிளிப் சமூக ஊடகத் தளமான X மூலம் வைரலாகப் பரவியது.
- பெர்னாமா


