கோலாலம்பூர், மே 21- மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்
நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் உள்நாட்டு ஆடவர் ஒருவர் கருகி
மாண்டார். இச்சம்பவம் டாமன்சாரா டாமாய், லெஸ்தாரி
அப்பார்ட்மெண்டின் சி புளோக்கின் நான்காவது மாடியிலுள்ள வீடொன்றில்
நேற்றிரவு 8.00 மணியளவில் நிகழ்ந்தது.
சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆடவருக்குச் சொந்தமான வீட்டில்
ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில் இரவு மணி 8.58 அளவில் தங்களுக்குத்
தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ்
மொக்தார் கூறினார்.
சுங்கை பூலோ மற்றும் டாமன்சாரா தீயணைப்பு நிலையங்களிலிருந்து 18
தீயணைப்பு வீரர்கள் ஐந்து வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக
அவர் சொன்னார்.
தீயணைப்பு வீரர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் இரவு 9.30
மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஆடவர் ஒருவர் அறை
ஒன்றில் கட்டிலில் உடல் கருகிய நிலையில் கிடப்பது
கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.


