புத்ராஜெயா, மே 20 - முக்கியமான தேசிய அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சமீபத்திய சம்பவங்கள் தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா என்பதைக் கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையும் உள்துறை அமைச்சும் இந்த விவகாரத்தை தீவிரமாகக் கருதுவதோடு மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க நிலைமையைக் அணுக்கமாக கண்காணித்து வருகின்றன என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
அந்த தாக்குதல்கள் ஏதேச்சையாக நடந்ததா? அல்லது ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியா? அவ்வாறு திட்டமிடப்பட்டவையாக இருந்தால் தனிநபர் அல்லது கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதா என்பதை தீர்மானிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு புதிய திரைப்பட தணிக்கை தொடர்பான வழிகாட்டியின் தொடக்க நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த மே 17ஆம் தேதி ஜோகூர், உலு திராம் காவல் நிலையத்தில் ஆடவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதோடு மற்றொருவர் காயமடைந்தார்.
அதே தினம், பெரோடுவா கெம்பாரா காரில் இஸ்தானா நெகாராவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 29 மற்றும் 37 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மே 18ஆம் தேதி சீபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் வீட்டு தபால் பெட்டியில் இரண்டு தோட்டாக்கள் மற்றும் எச்சரிக்கைக் குறிப்பு அடங்கிய ஒரு உறை வைக்கப்பட்டிருந்தது தொடர்பான புகாரைப் பெற்றதை நேற்று போலீஸார் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவங்கள் தொடர்பான போலீஸ் விசாரணைகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் இன்று விளக்கமளிக்க தாம் பணிக்கப்பட்டதாகச் சைபுடின் கூறினார்.
நாங்கள் அவற்றை (சம்பவங்களை) தீவிரமாக கருதுகிறோம். எங்கள் விசாரணை கும்பல் அல்லது தனிநபர்களின் சதித் திட்டம் மற்றும் நோக்கத்தை தீர்மானிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், அவை சுயமாக எடுக்கப்பட்ட முடிவுகளா அல்லது திட்டமிடப்பட்டவையாக என்பதையும் கண்டறிவோம் என்று அவர் தெரிவித்தார்.


