கோலாலம்பூர், மே 20- மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் (எம்.ஏ.எச்.பி.)
கட்டுப்பாட்டிலுள்ள விமான நிலையங்களில கடந்த ஏப்ரல் மாதம்
பயணிகள் எண்ணிக்கை 7.6 விழுக்காடு அதிகரித்து 1.1 கோடி பேராக
பதிவானது. அதற்கு முந்தைய மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 1
கோடியே 20 லட்சம் பேராக இருந்தது.
கடந்த மார்ச் மாதம் 71 லட்சமாக இருந்த மலேசியாவிலுள்ள உள்ளுர்
விமான நிலையங்களின் பயணிகள் எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 76
லட்சமாக உயர்வு கண்டதாக அந்த விமான நிர்வகிப்பு நிறுவனம்
தெரிவித்தது.
உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம 32 லட்சம்
பேராக இருந்த வேளையில் ஏப்ரல் மாதம் அந்த எண்ணிக்கை 37 லட்சம்
பேராக அதிகரிப்பைக் கண்டது.
மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் விமான
நிலையங்களுக்கு கடந்த ஏப்ரல் ஒரு பிரகாசமான மாதமாகும். நோன்புப்
பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக உள்நாட்டுப் பயணிகள்
எண்ணிக்கை 15 விழுக்காடு உயர்வு கண்டது என எம்.ஏ.எச்.பி. அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டது.
பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப விமானச் சேவைகளின் எண்ணிக்கையும்
கணிசமான அளவு அதிகரிப்பைக் கண்டது. கடந்த மார்ச் மாதம் 30,382ஆக
இருந்த விமானப் பயணச் சேவைகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 13
விழுக்காடு உயர்ந்து 34, 362ஆக உயர்வு கண்டது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்து 13 லட்சம் பயணிகள் ஆன வேளையில் பினாங்கு மற்றும் லங்காவி அனைத்துலக விமான நிலையங்கள் 15 விழுக்காடு பயணிகள் அதிகரிப்பை பதிவு செய்தன.
கடந்த ஏப்ரல் மாதம் பினாங்கு விமான நிலையம் 298,266 பயணிகளையும்
லங்காவி விமான நிலையம் 169,326 பயணிகளையும் கையாண்டது. இதன்
வழி உள்நாட்டு பயணச் சேவைக்கான முக்கியத் தளங்கள் என்ற நிலையை இவ்விரு விமான நிலையங்களும் தக்க வைத்துக் கொண்டன.
அனைத்துலகப் பயணிகள் எண்ணிக்கையும் சீரான வளர்ச்சியுடன் 39
லட்சம் பயணிகளை பதிவு செய்ததாகக் கூறிய எம்.ஏ.எச்.பி., மொத்த
பயணிகள் எண்ணிக்கையில் இது 51 விழுக்காடாகும் என்றது.


