கோலாலம்பூர், மே 20- முதலீடுகளை ஈர்ப்பதில் மடாணி அரசாங்கம்
கடந்தாண்டு வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் முதலீடு, வரலாற்றில் முதன்
முறையாக 23 விழுக்காடு உயர்ந்து 32,950 கோடி வெள்ளியாகப்
பதிவாகியுள்ளது. இதன் வழி மக்களுக்கு உயர் திறன் துறைகள் உட்பட
அபரிமிதமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் சராசரி
வருமான அளவையும் உயர்த்த உதவியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட 5,101 திட்டங்கள் வாயிலாக
அதி முக்கியத்துவம் வாய்ந்த 127,000 வேலை வாய்ப்புகள்
உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை
விட்டு வெளியேறும் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெறுவதற்குரிய
வாய்ப்பு இதன் மூலம் கிட்டியுள்ளது.
இதில் ஊக்கமளிக்கும் விஷயம் என்னவென்றால், கடந்தாண்டு பெறப்பட்ட
முதலீடுகளில் 57.2 விழுக்காடு அல்லது பாதி வெளிநாட்டு நேரடி
முதலீடுகளாகும். இப்பிராந்தியத்தில் நிலவும் கடுமையான போட்டிக்கும்
மத்தியில் முதலீட்டாளர்களின் தேர்வுக்குரிய இடமாக மலேசியா
தொடர்ந்து விளங்கி வருவதை இது காட்டுகிறது. முறையாக
வடிவமைக்கப்பட்ட முதலீட்டுக் கொள்கைகளே இந்த சாதகமான சூழலுக்குக்
காரணமாகும்.
அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை நடைமுறைகளைப் பாராட்டிய
மலேசிய உற்பத்தியாளர் சங்க சம்மேளனத்தின் தலைவர் டான்ஸ்ரீ சோ
தியான் லாய், இதன் மூலம் உற்பத்தி துறையில் கணிசமான
முதலீடுகளை ஈர்ப்பதற்குரிய வாய்ப்பு மலேசியாவுக்கு கிட்டியது என்றார்.
உயர் தொழில்நுட்பத் துறை சார்ந்த பிரசித்தி பெற்ற பன்னாட்டு
நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகளை அமைக்க முன்வந்துள்ளதோடு
தற்போது இங்கு செயல்பட்டு வரும் நிறுவனங்களும் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளன. இதன் மூலம் உள்நாட்டினருக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு சாத்தியம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
உயர்வருமானம் கொண்ட நாடாக மலேசியாவை உருமாற்றுவதை
இலக்காக கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டுத்
திட்டங்கள் உற்பத்தி துறையை முக்கிய துறையாக அடையாளம்
கண்டுள்ளன. இந்த துறையில் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும்
அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகளையும் ஊக்குவிப்புகளையும்
அரசாங்கம் வழங்கி வருகிறது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
கடந்தாண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளின் மூலம் வரும் 2024ஆம்
ஆண்டில் குறைந்த பட்சம் 8 முதல் 10 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு
செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.


