ஜோகூர் பாரு, மே 19- உலு திராம் காவல் நிலையத்தின் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்திய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவருக்கு எந்த பயங்கரவாத கும்பலுடனும் தொடர்பில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர் ஜெமா இஸ்லாமியா அமைப்பின் (ஜே.ஐ.) உறுப்பினர் என்ற தொடக்கக் கட்ட அறிக்கையானது பயங்கரவாதக் கும்பலுடன் அவரது தந்தைக்கு உள்ள ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெளிவுபடுத்தினார்.
அரச மலேசியா போலீஸ் படையின் தரவுகள் சந்தேக நபரின் 62 வயதுடைய தந்தை ஜே.ஐ. உறுப்பினர் என்பதை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
சந்தேக நபர் எந்த பயங்கரவாத கும்பலுடனும் தொடர்புடையவர் அல்ல. அவருக்கு ஜே.ஐ. அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை. அவர் பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறிய ரஸாருடின், தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றார்.
முன்னதாக, ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அந்த 21 வயது இளைஞர் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி இருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 46 நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடிப்படையாகக் கொண்ட போலீஸாரின் ஆரம்பக் கட்ட முடிவுகள் எந்தவொரு திட்டமிடப்பட்ட கும்பலுடனும் அவர்களின் நடவடிக்கைகள் இணைக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது என்றார் அவர்.








