புத்ராஜெயா, மே 18 - இம்மாதம் 16ஆம் தேதி கிள்ளானில் உள்ள மின்னியல் கழிவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 33 வெளிநாட்டினரை குடிநுழைவுத் துறை கைது செய்தது.
சட்டவிரோதமாக இயங்கி வருவது மற்றும் மனித கடத்தலின் சாத்தியமான கூறுகளுடன் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தியது தொடர்பில் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.
ஆபத்தான பொருட்கள் மற்றும் மதிப்புமிக்க உலோகங்களை பிரிக்கும் செயல்முறையை உள்ளடக்கிய மின்-கழிவுகளை பதப்படுத்தும் பணியை இந்த தொழிற்சாலை மேற்கொண்டு வந்தது என்று அவர் சொன்னார்.
அந்த தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைப்பட்டியல் அடிப்படையில் பெறப்பட்ட மின்-கழிவுகள் ஒரு வாரத்திற்குள் பதப்படுத்தும் அளவுக்கு மட்டுமே இருந்தன. ஏனெனில் இந்த பதப்படுத்தும் செயல்முறையை திறமையான சீன நாட்டு தொழிலாளர்களால் மட்டுமே கண்காணிக்க முடியும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தங்கள் நடவடிக்கைகளை மறைப்பதற்காக சம்பந்தப்பட்ட சீனப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறும் முன் அதே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மற்ற தொழிற்சாலைகளுக்கு மாற்றப்படுவார்கள்.
அத்த மின்னியல் பொருள்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிறகு இந்த சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் கிடைக்கும் லாபம் சுமார் 300,000 முதல் 500,000 வெள்ளி வரை இருக்கும் என நம்பப்படுகிறது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த தொழிற்சாலை மலேசியர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சீன பிரஜையை பினாமியாகக் கொண்டு நிர்வகிக்கப்படுகிறது என்றார் அவர்.
பெறப்பட்ட கடப்பிதழ் எண்ணின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை குடிநுழைவுத் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.








