கோலாலம்பூர், மே 18 - பேராக் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கெடாவில் வெள்ள நிலைமை மேம்பாடு கண்டு வருகிறது. இவ்விரு மாநிலங்களிலும் நேற்று மாலை வரை 615 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பேராக்கில், நேற்று மதியம் 12.00 மணியளவில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேராக இருந்த நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை மாலையில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 537 பேராக உயர்ந்தது. நிவாரண மையங்களின் எண்ணிக்கையும் நான்கிலிருந்து 10 ஆக உயர்ந்தது.
தைப்பிங் மாவட்டத்தில் 109 குடும்பங்களைச் சேர்ந்த 382 பேர் தற்போது
டேவான் ஒராங் ராமாய் பத்து ஹம்பார், துரோங், மாத்தாங் குளுகோர் தேசியப் பள்ளி, டேவான் ஒராங் ராமாய் சுங்கை பாரு துரோங், டேவான் ஒராங் ராமாய் ஜெபோங் கீரி, மஸ்ஜிட் அல்-வுஸ்தா பத்து 8, மற்றும் தைப்பிங் மாவட்டத்தில் உள்ள தெமர்லோக் தேசியப் பள்ளி ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர்.
மேலும், 32 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் கோல கங்சார் மாவட்டத்தில் உள்ள தெமோங் தேசியப் பள்ளி, டேவான் ஒராங் ராமாய் கம்போங் தாலாங் மஸ்ஜித் மற்றும் பெரியாங் தேசியப் பள்ளி ஆகிய இடங்களில் தங்கியுள்ள வேளையில் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள டேவான் செர்பகுனா பாடாங் தேம்பாக்கில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
கெடாவில், நேற்று மதியம் 26 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த வேளையில் நேற்று மாலை அந்த எண்ணிக்கை 17 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேராக குறைந்தது. பண்டார் பாரு மாவட்டத்தில் உள்ள மஸ்ஜித் சுங்கை பத்து நிவாரண மையம் இரவு 7 மணிக்கு மூடப்பட்டது.
எஞ்சியுள்ள 78 பேர் கூலிம் மாவட்டத்தில் உள்ள ஜங்காங்கில் உள்ள அல்-இஹ்சானியா சமய இடைநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.








