புத்ராஜெயா, மே 17 - மலேசியாவில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பத்து லட்சம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டு தேசிய சுகாதார மற்றும் நோய்மை ஆய்வு (என்.எச்.எம்.எஸ்.) அறிக்கை தெரிவிக்கிறது.
தொற்றா நோய்கள், சுகாதாரத் தேவை மற்றும் சுகாதாரத் தகவல்களைச் சேகரிப்பதற்கும் மலேசியர்களிடையே நோய்களின் பரவலைக் கண்டறிவதற்கும் இந்த என்.எச்.எம்.எஸ் 2023 திட்டம் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது அவர்களால் நேற்று சுகாதார அமைச்சில் தொடங்கப்பட்டது.
கடந்த 2019 முதல் 2023 வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளின் வழி தெரிய வந்துள்ளது.
அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்களைக் கொண்டிருந்தனர் என்று அது கூறியது.
இதற்கிடையில், ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களில் ஆறில் ஒருவர் மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளததோடு இத்தகைய பிரச்சனைகளின் பாதிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இரட்டிப்பாகியுள்ளது.
இந்தச் சிறார்கள் எதிர்கொள்ளும் சில மனநலப் பிரச்சனைகள் அவர்களின் சகாக்கள், நடத்தை, உணர்ச்சிகள் மற்றும் மிகைச் செயல்பாட்டுடன் தொடர்புடையவையாக உள்ளன.
மலேசியாவில் 500,000 பெரியவர்கள் அல்லது 2.5 சதவீதம் பேர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் ஆகிய நான்கு தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை வெளிப்படுத்தியது.
இதனிடையே, இந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜூல்கிப்ளி,
பெரியவர்களிடையே அதிகரித்து வரும் அதிக எடை மற்றும் உடல் பருமன் விஷயத்தில் குறித்து சுகாதார அமைச்சு தீவிர மற்றும் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்னார்.
அதிகப்படியான சக்கரையை உட்கொள்வது இப்பிரச்சனையின் தாக்கத்திற்கான காரணம் என்று அவர் கூறினார்.


