ஈப்போ, மே 17- பேராக் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் நேற்றிரவு
ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 150
பேர் ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி தைப்பிங்கில் திறக்கப்பட்டுள்ள
நான்கு துயர் துடைப்பு மையங்களில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர்
தங்க வைக்கப்பட்டுள்ளதாகப் பேராக் மாநில பேரிடர் மேலாண்மை
செயல்குழு கூறியது.
ஹிலிர் பேராக் மாவட்டத்தில் பாடாங் தேம்பாக் சமூக மண்டபத்தில்
திறக்கப்பட்டுள்ள ஒரு மையத்தில் பத்து 9, ஜாலான் சங்காட் ஜோங்
பகுதியில் வசிக்கும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் அடைக்கம்
நாடியுள்ளதாக அது குறிப்பிட்டது.
கோல கங்சார் மாவட்டத்தின் செரியாங் தேசிய பள்ளியில் செயல்படும்
ஒரு துயர் துடைப்பு மையத்தில் கம்போங் பெரியாங்கில் வசிக்கும் 12
குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தங்கியுள்ளனர் என அந்த செயல்குழு
அறிக்கை ஒன்றல் தெரிவித்தது.
இதனிடையே, கெடா மாநிலத்தின் கூலிம் மற்றம் பண்டார் பாருவில்
நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து இரு நிவாரண
மையங்கள் திறக்கப்பட்டு 31 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் அடைக்கலம்
பெற்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் கம்போங் பாடாங் லீமாவைச் சேர்ந்தவர்களாவர்.
பலத்த மழையின் காரணமாக அருகிலுள்ள மேடான பகுதிகளிலிருந்து
மழை நீர் வழிந்தோடி தாழ்வான பகுதிகளில் புகுந்தது.
வெள்ளம் ஏற்படும் பகுதிகளை மலேசியா பொது தற்காப்பு படை
உறுப்பினர்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதோடு ஒவ்வொரு
இடத்திலும் நீர் மட்டத்தை அளவிட்டு வருவதாக கூலிம் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயலகத்தின் அதிகாரி கேப்டன் அமிருள் அலிப் அகமது தெரிவித்தார்.
நேற்று மாலை 6.00 மணி தொடங்கி பெய்த கனத்த மழையின் காரணமாக
சுங்கை தெருன்சிங்கில் நீர் பெருக்கெடுத்து அருகிலுள்ள கிராமங்களைச்
சூழந்தது.


