ஈப்போ, மே 17- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 367வது கிலோ மீட்டரில்
சிலிம் ரிவர் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த மூன்று லோரிகள்
சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
பழங்கள் ஏற்றி வந்த இரு லோரிகள் மற்றும் முட்டை ஏற்றியிருந்த ஒரு
லோரி சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் முட்டை ஏற்றிய லோரியின்
ஒட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முவாலிம் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ஹஸ்னி முகமது நாசீர்
கூறினார்.
சுங்கையிலிருந்து சிலிம் ரிவர் நோக்கிச் செல்லும் பகுதியில் நிகழ்ந்த
இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 5.45 மணிக்கு தங்களுக்கு தகவல்
கிடைத்ததாக அவர் சொன்னார்.
இந்த விபத்தின் காரணமாக ஒரு லோரி சாலையின் குறுக்கே அனைத்து
தடங்களையும் மறைத்த நிலையில் காணப்பட்டது. இதனால் அந்த
நெடுஞ்சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது. நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக தாப்பா, பீடோர் அல்லது
சுங்கை டோல் சாவடி வழியாக நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும்படி
வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 4.40 மணியளவில்
தங்களுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சிலிம் ரிவர் மற்றும்
பீடோர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்புக் குழுவினர் சம்பவ
இடத்திற்கு விரைந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு
துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர்
அகமது குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் கோழி முட்டை ஏற்றி வந்த லோரியும் பழங்கள் ஏற்றி
வந்த இரு லோரிகளும் சம்பந்தப்பட்டிருந்தன. முட்டை ஏற்றி வந்த லோரியின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அதன் ஓட்டுநர் மீட்கப்பட்ட வேளையில் அவர் உயிரிழந்து விட்டதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


