ஷா ஆலம், மே 16- மலேசியாவின் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமான சிலாங்கூரைச் சேர்ந்த தொடக்க நிறுவனங்கள் உலகளாவிய சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஐப்பானுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள மாநில அரசு ஆர்வம் கொண்டுள்ளது.
நேற்று தோக்கியோ மெட்ரோபோலிட்டன் அரசாங்கத்துடன் சிலாங்கூர் மாநில அரசின் பிரதிநிதிகள் நடத்திய சந்திப்பின் போது இந்த இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக முதலீடு மற்றும் வர்த்தகத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.
தற்போது ஜப்பானில் பெரும் எண்ணிக்கையிலான தொடக்க நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் உலகின் அந்த மிகப்பெரிய பொருளாதார நாட்டிடமிருந்து வாய்ப்புகளைப் பெறுவது சிலாங்கூருக்கு மிக முக்கியமானதாகும் என அவர் சொன்னார்.
உலகின் நான்காவது பொருளாதார நாட்டிடமிருந்து வாய்ப்புகளைப் பெறுவது மிக முக்கியமானதாகும். ஜப்பான் தற்போது சுமார் 10,000 தொடக்க நிறுவனங்களுக்கு ஏற்பாட்டு ஆதரவை வழங்கி வருகிறது. மலேசியாவை விட இது மூன்று மடங்கு அதிகமாகும் என அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட கருத்துகளை செயல்வடிவமாக்குவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என இங் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில பேராளர் குழுவுக்கு தலைமையேற்று இங் ஜப்பானுக்கு அதிகாரப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.


