புத்ராஜெயா, மே 16- நகர்ப்புறங்களில் நடுவதற்கு உகந்த மற்றும் பொது
மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத மர வகைகளை அடையாளம்
காணும்படி தேசிய நில வடிவமைப்புத் துறை பணிக்கப்பட்டுள்ளதாக
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.
இவ்விவகாரம் குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டதாகவும் இதன் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை
தேசிய நில வடிவமைப்புத் துறை மேற்கொள்ளும் என்றும் அவர்
சொன்னார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து
பேசப்பட்டது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்
நகர்ப்புறங்கள் மற்றும் சாலையோரங்களில் நடுவதற்கு உகந்த மரங்களை
அடையாளம் காணும்படி தேசிய நிலவடிவமைப்புத் துறை கேட்டுக்
கொள்ளப்பட்டது என்றார் அவர்.
நேற்று இங்கு 2024 தேசிய நில வடிவமைப்புத் துறை தினத்தின்
முன்னோட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் அகற்றப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 100
மரங்களை நடும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அண்மைய மாதங்களில் மாநகரில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மரம் விழும் சம்பவங்களைத் தொடர்ந்து பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இம்மாதம் 7ஆம் தேதி பலத்தக் காற்றுடன் கூடிய கனத்த மழையின்
போது தலைநகர், ஜாலான் துன் இஸ்மாயிலில் மரம் வேறோடு சாய்ந்ததில் வானமோட்டி ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளானார்.


