புத்ராஜெயா, மே 16 - தற்போதைய RM1,500ஆக இருக்கும் குறைந்தபட்ச ஊதிய விகிதம் RM2,102 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (Unicef) முன்மொழிவு கவனமாக ஆய்வு செய்யப்படும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறினார்.
வாழ்க்கைச் செலவைக் கையாள்வதில் மடாணி அரசாங்கத்தின் அணுகுமுறை ஊதியம் உட்பட மக்களின் வருமானத்தில் கவனம் செலுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
"...அதை விரிவாகப் பார்த்தால், கட்டமைப்பில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உள்ளது நமக்கு தெரியும். ஆனால் முற்போக்கான ஊதிய முறை தேவை, அதன் முன்னோடி திட்டத்தை தொடங்குவோம். ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது.
"முந்தைய அனைத்து நிர்வாகங்களுடன் ஒப்பிடுகையில், எனது பார்வையில், தற்போதைய நிர்வாகம் ஊதியப் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் இது ஊழியர்கள், முதலாளிகள், திறன் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கியதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்" என ரஃபிஸி கூறினார்.
நேற்று இன்னோவதன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசனை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான விவாதம், செயல்முறை ஆகியவை தேசிய ஊதிய ஆலோசனை கவுன்சிலின் பொறுப்பாகும். இது குறைந்தபட்ச ஊதியத்தின் நிலையை மதிப்பிடும் என்று ரஃபிஸி கூறினார்.
சில ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது, நேரம் வரும்போது சட்டத்தில் உள்ள செயல்முறையின் படி மனித வள அமைச்சகம் அதை அரசாங்கத்தின் பரிசீலனைக்குக் கொண்டு வரும்.
மே 8 அன்று, ‘தி லிவிங் ஆன் தி எட்ஜ் கீ ஃபைன்டிங்ஸ்’ என்ற அறிக்கையில், வாழ்க்கைச் செலவு, வறுமைக் கோட்டு வருமானம் மற்றும் உற்பத்தித்திறன் போன்ற முக்கியக் காரணிகளைக் கருத்தில் கொண்டு ஊதிய விகிதம் RM2,102 என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாக யுனிசெஃப் அறிவித்தது.
- பெர்னாமா


