ஷா ஆலம், மே 14 - தென்மேற்கு பருவ காலம் நெருங்கி வருவதால் அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் வறண்ட நிலை ஏற்படும் என மலேசியர்களுக்கு வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவக் காலம் மே 17 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட் மலேசியா டைரக்டர் ஜெனரல் முகமட் ஹெல்மி அப்துல்லா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதன் விளைவாக, பெரும்பாலான பகுதிகளில் குறைந்த நாட்களே மழை பெய்யும், இருப்பினும் தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை உட்பட சில இடங்களில் சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
"தென்மேற்கு பருவமழையின் போது, காற்று பொதுவாக தென்மேற்கு திசையிலிருந்து வீசும்" என்று அவர் கூறினார்.
"இந்த பருவகால மாற்றம் மேகங்கள் உருவாவதைக் குறைக்கும் மற்றும் குறைந்த அளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அதிக வறண்ட நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் தண்ணீரை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு ஹெல்மி பொது மக்களை வலியுறுத்தினார்.
வானிலைத் தகவலைப் பெற விரும்புவோர், மெட் மலேசியாவின் இணையதளம், அதிகாரப்பூர்வச் சமூக ஊடக தளங்கள், myCuaca செயலி அல்லது 1300-22-1638 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பெறலாம்.


