ஜோகூர் பாரு, மே 13: போலி இணைய வழி முதலீட்டால் ஏமாற்றப்பட்ட தொழில் ஓய்வு பெற்ற ஒருவர் RM619,390 ஐ இழந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் (56), கடந்த பிப்ரவரி மாதம் வெளிநாட்டு ஆடவனிடமிருந்து மின்னஞ்சல் வந்ததை அடுத்து, முதலீட்டில் சேர்ந்ததாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம் குமார் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர் கிரிப்டோ முதலீட்டில் பங்கேற்றுள்ளார். இதில் முதலீடு செய்யப்படும் பணத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 35 முதல் 50 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கேட்டு அதில் சேர்ந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் பிப்ரவரி 19 முதல் மே 7 வரை 7 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 28 முறை பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார், பின்னர், சந்தேகம் அடைந்து நேற்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மோசடி செய்ததற்காகக் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் அவரது தரப்பு வழக்கை மேலும் விசாரித்து வருகிறது.
கடந்த ஜனவரி முதல் நேற்று வரை 255 முதலீட்டு வழக்குகள் ரிங்கிட் 21.24 மில்லியன் நஷ்டத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
எனவே, பொது மக்கள் எப்போதும் குறிப்பாக நிதி பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் விழிப்புடன் இருக்குமாறும், முதலீட்டு மோசடி போன்ற வணிக குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களைப் பெற வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் முகநூல் மற்றும் டிக் டோக் பக்கங்களைப் பின்தொடரவும் அறிவுறுத்தினார்.
– பெர்னாமா


