புத்ராஜெயா, மே 13: ஐந்தாம் படிவம் மாணவர் ஒருவர் தனது பூட்டிய வீட்டுக்குள் சுவரில் ஏறி நுழைய முயன்றபோது ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் மலேசிய அரசு ஊழியர் குடியிருப்பில் (பிபிஏஎம்) மெலின்ஜாவ் வீடு தொகுதி 11இல் நடந்ததாகப் புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஏ அஸ்மாதி அப்துல் அஜீஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் பலத்த மழை காரணமாக வீட்டின் பின் கதவின் பால்கனியில் ஏற முயன்று ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்தார்.
பாதிக்கப்பட்டவர் ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் ஆவார். அவர் தலையில் இரத்தப்போக்கு காரணமாக புத்ராஜெயா மருத்துவமனையில் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- பெர்னாமா


