உலு சிலாங்கூர், மே 11- கோல குபு பாரு இடைத் தேர்தலுக்கான 14 நாள் பிரசார காலத்தின் போது 3ஆர் அதாவது அரச, சமய மற்றும் இன விவகாரங்கள் எழுப்பப்பட்டது தொடர்பில் எந்த புகாரையும் காவல்துறை பெறவில்லை.
இந்த பிரச்சார காலத்தின் போது மேம்பாட்டு விவகாரங்கள் தவிர உணர்ச்சிகரமான எந்த விஷயமும் எழுப்பப்படவில்லை என்பது காவல் துறை மேற்கொண்ட கண்காணிப்பின் வழி தெரிய வந்தது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
பாதுகாப்பை பொறுத்த வரை பெரும்பாலான காவல்துறை உறுப்பினர்களும் அதிகாரிகளும் இது போன்ற நிகழ்வுகளை நிர்வகிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதோடு பொது அமைதியை குறிப்பாக வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முறையான திட்டமிடலைக் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
வேட்பு மனுத் தாக்கல் தினமான கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி நேற்றிரவு 11.59 மணி வரை இத்தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த பிரச்சார காலத்தின் போது பிரச்சாரம் மேற்கொள்வதற்கு வேட்பாளர்கள் மற்றும் தனி நபர்களுக்கு 190 பெர்மிட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவ், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்








