உலு சிலாங்கூர், மே 11- கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு 18 வாக்குச் செலுத்தும் மையங்களில் 74 வாக்குச்சாவடிகள் இன்று காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டன.
புக்கிட் பிரேசர் சீன ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்களிப்பு மையம் நீங்கலாக மற்ற அனைத்து வாக்களிப்பு மையங்களும் இன்று மாலை 6.00 மணிக்கு மூடப்படும். புக்கிட் பிரேசர் வாக்குச் சாவடி நாற்பது வாக்காளர்கள் மட்டுமே உள்ள காரணத்தால் அது 2.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
இந்த தேர்தலில் தகுதி பெற்ற 39,269 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையை இறுதியாக சரிபார்க்கும் பணி உலு சிலாங்கூர் சமூக மண்டம் மற்றும் விளையாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும். இரவு 10.00 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலை முன்னிட்டு 760 தேர்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வேளையில் 1,133 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடக்க கட்ட வாக்களிப்பில் போலீஸ் மற்றும் இராணுவ வீர்ர்கள் மற்றும் அவர்களின் துணைவியரை உள்ளடக்கிய 769 பேர் தங்கள் ஜனநாயக க் கடமையை நிறைவேற்றினர்.
கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவ், பெரிக்கத்தான் நேஷனல் சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
.கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.








