ஜோகூர் பாரு, மே 2- ஆட்டிஸம் எனப்படும் மதி இறுக்க குறைபாடு
கொண்ட ஐந்து வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி மாண்டார். இங்குள்ள
ஜாலான் கம்போங் செபாக்காட், பாரு, ஸ்கூடாய் ஆற்றில் அச்சிறுவனின்
உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
நேற்றிரவு 11.15 மணியளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 130
மீட்டர் தொலைவில் அச்சிறுவனின் உடலை தீயணைப்பு வீரர்கள்
மீட்டதாக ஸ்கூடாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உதவி
தலைமை ஆணையர் சைபுல்பஹ்ரி சஃபார் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.59 மணிளவில் புகார்
கிடைத்ததைத் தொடர்ந்து ஏழு பேர் அடங்கிய நீர் மீட்புக் குழுவினர் இரு
வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
அச்சிறுவன் தவறி விழுந்ததாக கூறப்படும் பகுதியிலிருந்து சுமார் 800
மீட்டர் தொலைவுக்கு ஆற்றின் மேற்பரப்பில் தேடுல் நடவடிக்கையை
அவர்கள் மேற்கொண்டனர் என்றார் அவர்.
பின்னர் நீர் மீட்பு பிரிவு உறுப்பினர்கள் ஆற்றில் மூழ்கி தேடுதல்
நடவடிக்கையை மேற்கொண்ட போது சம்பவ இடத்திலிருந்து சுமார் 130
மீட்டர் தொலைவில் நான்கு மூட்டர் ஆழத்தில் அச்சிறுவனின் உடல்
கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
மேல் நடவடிக்கைக்காக அச்சிறுவனின் உடல் போலீசாரிடம்
ஒப்படைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.


