ஷா ஆலம், மே 1- பிரதமர் பத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்த சம்பள உயர்வு அரசாங்க ஊழியர்களுக்கு ஒற்றுமை அரசு உரிய மதிப்பினை அளிப்பதைக் காட்டுகிறது.
மேலும், கடுமையாக உழைப்பதற்குரிய உத்வேகத்தை இந்த சம்பள உயர்வு அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பதிமூன்று விழுக்காட்டிற்கும் அதிகமான இந்த சம்பள உயர்வு வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. நாட்டின் வரலாற்றில் அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அதிகப்படச சம்பள உயர்வாக இது விளங்குகிறது.
அரசு ஊழியர்களின் சேவை மற்றும் அர்ப்பண உணர்வை ஒற்றுமை அரசு போற்றுவதை இந்த சம்பள உயர்வு புலப்படுத்துவதாகக் கூறிய அமிருடின், உற்பத்தியையும் சேவைத் திறனையும் அதிகரிப்பதற்குரிய தூண்டுகோலாக இந்த சம்பள உயர்வு அமையும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று அனுசரிக்கப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிலாங்கூரிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அமிருடின் தனது தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.








