கோலாலம்பூர், ஏப் 30- நாடு முழுவதும் உள்ள தனது 100 கிளைகளை
கே.எஃப்.சி. மலேசியா மூடியுள்ளது. இந்நடவடிக்கைக்கு சவால்மிகுந்த
பொருளாதாரச் சூழல் காரணம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்ரேலுடனான தொடர்பு காரணமாக எழுந்த புறக்கணிப்பு காரணமாக
அவை மூடப்பட்டதாக வெளிவந்த ஊடகச் செய்திகளுக்கு விளக்கமளிக்கும்
வகையில் அந்த பிரசித்தி பெற்ற உணவுச் சங்கிலித் தொடர் நிறுவனம்
இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடான மலேசியா
தீவிர பாலஸ்தீன ஆதரவாளராக விளங்கி வருகிறது. காஸா மீதான
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காரணமாக மேற்கத்திய துரித உணவு
நிறுவனங்களை புறக்கணிக்கும் இதர முஸ்லீம் நாடுகளுடன்
மலேசியாவும் இணைந்து கொண்டுள்ளது.
சவால்மிக்க பொருளாதாரச் சூழல்கள் காரணமாகப் பல கிளைகளை
தாங்கள் தற்காலிகமாக மூடியுள்ளதாகக் கே.எஃப்.சி மற்றும் பிஸ்ஸா ஹட்
உணவகங்களை நடத்தி வரும் உரிம வர்த்தக நிறுவனமான கியு.எஸ்.ஆர்.
பிராண்ட்ஸ் (ம) ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் கூறியது.
அதிகரித்து வரும் நடவடிக்கைக் செலவினங்களை கட்டுப்படுத்தும்
விதமாகவும் வர்த்தக மண்டலங்களில் தீவிர கவனம்
செலுத்துவதற்காகவும் சில கிளைகளை தற்காலிமாக மூடும் ஆக்ககரமான
நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம் என்று அந்நிறுவனம் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தது.
எத்தனை கே.எஃப்.சி. கிளைகள் மூடப்பட்டன என்று அந்நிறுவனம்
அறிக்கையில் குறிப்பிடவில்லை. எனினும், 100 கிளைகள் தற்காலிகமாக
மூடப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


