கோலாலம்பூர், ஏப் 30- உலு சிலாங்கூர் மாவட்டத்தின் உலு பெர்ணமிலுள்ள
வீடமைப்பு பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்து
ஆடவர்கள் கைது செய்யப்பட்டதன் வழி போதைப் பொருள்
விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கோங்
போப் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
குடும்ப உறவுகள் என நம்பப்படும் 21 முதல் 59 வயது வரையிலான
அவர்கள் அனைவரும் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாகப் போதைப்
பொருள் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளதாக உலு
சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண் அகமது
பைசால் தாஹ்ரிம் கூறினார்.
அந்த ஐவரும் நேற்று முன்தினம் இரவு 10.50 மணியளவில் கைது
செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அவர்களிடமிருந்து 7,762.40 வெள்ளி
மதிப்புள்ள 2.5 கிலோ கஞ்சா, மற்றும் 21,000 வெள்ளி மதிப்புள்ள மூன்று
மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
பொட்டலம் வடிவில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டிருந்த 1.7 கிலோ
கஞ்சா வீட்டின் உட்கூரையிலும் 0.77 கிலே கஞ்சா வீட்டின் அலமாரியில்
துணிகளுக்கு மத்தியிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு
பிடிக்கப்பட்டது என்றார் அவர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
என்பதோடு மற்ற இருவர் அவர்களின் சகாக்கள் என்று நேற்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் சிகையலங்கரிப்பு, லோரி ஓட்டுநர் மற்றும்
லோரி உதவியாளர்களாக உள்ள வேளையில் ஒருவருக்கு வேலை ஏதும்
கிடையாது. அவர்களில் மூவருக்கு எதிராகப் போதைப் பொருள் தொடர்பில்
எட்டு குற்றப்பதிவுகள் உள்ளன என்று அகமது பைசால் குறிப்பிட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தித்ன 117வது பிரிவின் கீழ் அவர்கள்
அனைவரும் வரும் மே 5ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.


