கங்கார், ஏப்.29: மலேசியா-தாய்லாந்து எல்லையில் சூப்பிங்-பாடாங் பெசார் அருகே கடந்த சனிக்கிழமை 93,000 வெள்ளி மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அப்பகுதியில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட வான் நடவடிக்கைக் குழு, பாதுகாப்பு வேலியின் தாய்லாந்து பக்கத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு சக்கர இயக்க வாகனம் இருப்பதைக் கண்டறிந்தது தொடர்ந்து அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்று பெர்லிஸ் மாநில காவல்துறை துணைத் தலைவர் எஸ்ஏசி பட்ருல்ஹிஷாம் பஹாருடின் கூறினார்.
அந்த தகவலின் பேரில் பொது நடவடிக்கைக் குழு அப்பகுதிக்குச் சென்று 30 அலுமினியத் தகடுகளால் சுற்றப்பட்ட போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் கட்டிகளைக் கொண்ட மூன்று வெள்ளை சாக்குகளைக் கைப்பற்றியது என அவர் குறிப்பிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை 150,000 போதைப் பித்தர்கள் பயன்படுத்த முடியும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், ஜாலான் காக்கி புக்கிட், கம்போங் வாங் கெலியானில் 20 வயது உள்ளூர் நபரை போலீசார் கைது செய்து 1,020 கிலோகிராம் கெத்தும் இலைகளை பறிமுதல் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


