ஷா ஆலம், ஏப் 29- இங்குள்ள மேரு தொழில்பேட்டைப் பகுதியில் இன்று
அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் சாயத் தொழிற்சாலை ஒன்று
கடுமையாகச் சேதமுற்றது.
இந்த தீவிபத்து தொடர்பில் தமது தரப்புக்கு அதிகாலை 6.34 மணியளவில்
புகார் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ்
மொக்தார் கூறினார்.
அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து காப்பார், கிள்ளான் உத்தாமா,
அண்டலாஸ் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 39 உறுப்பினர்கள்
தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்
சொன்னார்.
தீயைக் கட்டுப்படுத்துவதில் கோலக் கிள்ளான், கோத்தா ராஜா, ஷா ஆலம்,
புக்கிட் ஜெலுத்தோங் மற்றும் ரவாங் தீயணைப்பு நிலைய உறுப்பினர்களும்
பங்கு கொண்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த தீச்சம்பவத்தில் அத்தொழிற்சாலையின் இரு கட்டிடங்கள்
பாதிக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்த போது தீ
அக்கட்டிடத்தின் பெரும் பகுதியைச் சூழ்ந்து விட்டது என்று அவர்
குறிப்பிட்டார்.
இந்த தீவிபத்தில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்படவில்லை எனக் கூறிய
அவர் தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.


