கோலாலம்பூர், ஏப் 29- சுமார் 300,000 வெள்ளி மதிப்பிலான விநியோகத் திட்டங்களை மேற்கொள்ள தனக்கு வேண்டிய நிறுவனங்களை நியமித்த சந்தேகத்தின் பேரில் வட பிராந்தியத்தில் உள்ள மூத்த தலைவர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரித்து வருகிறது.
பத்து லட்சம் வெள்ளி மதிப்புள்ள சாலை பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகப் பல்வேறு நிறுவனங்களை சம்பந்தப்பட்ட தலைவர் நியமித்ததாக நம்பப்டுவதாகவும் இந்நிறுவனங்கள் அவரின் மகனுடன் தொடர்புடையவை எனக் கருதப்படுகிறது என்றும் எம்.ஏ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.
தன் மகனின் கட்டுப்பாட்டில் உள்ள பல நிறுவனங்களின் உரிமங்களைப் பயன்படுத்தி அந்த தலைவர் இந்தத் திட்டங்களை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது
இந்தக் குற்றங்கள் யாவும் கடந்தாண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு மார்ச் வரை புரியப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் திட்டப் பணிகளுக்காக தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகவும் திட்ட மதிப்பில் சுமார் ஐந்து சதவிகிதம் கமிஷன் பெற்றதாகவும் கூறப்படுகிறது என்று அந்த வட்டாரம் பெர்னாமாவிடம் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட தலைவரின் மகனின் கட்டுப்பாட்டில் உள்ள 15 நிறுவனங்கள்
மினரல் வாட்டர் எனப்படும் கனிம நீர், பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களை விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விசாரணையை உறுதிப்படுத்திய எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசாம் பாக்கி,விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாகக் கூறினார்.


