ரியாத், ஏப் 29- சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் உலகப்
பொருளாதார ஆய்வரங்கின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூட்ட இடைவேளையின் போது
ருவாண்டா அதிபர் பால் ககாமேவைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள்
குறித்து விவாதித்தார்.
இந்த சிறப்பு பொருளாதாரக் கூட்டத்தின் தொடக்க நிகழ்வுக்குப் பிறகு
காலை 11.40 மணியளவில் (உள்ளூர் நேரம்) தொடங்கிய இச்சந்திப்பு சுமார்
30 நிமிடங்களுக்கு நீடித்தது.
இந்த சந்திப்பின் போது மலேசியாவுக்கு வருகை புரியும்படி அதிபர்
ககாமேவுக்கு அன்வார் அழைப்பு விடுத்தார். அதிபர் ககாமேவும் தங்கள்
நாட்டிற்கு வருகை தரும்படி அன்வாரைக் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இரு தரப்பு வர்த்தகம் குறித்து
விவாதித்தனர். ஹலால் மற்றும் செம்பனைத் துறைகளில் வர்த்தகத்தை
அதிகரிப்பது உள்ளிட்டவை இந்த சந்திப்பில் முக்கிய இடம் பெற்றன.
மலேசியாவுக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான வர்த்தகம் தற்போது 2கோடியே 50 லட்சம் டாலராக (11 கோடியே 92 லட்சம் வெள்ளி) உள்ளது.
பேரிடர் இடர் மேலாண்மை, நகர திட்டமிடல், இலக்கவியல், சுற்றுலா,
மனித மூலதன மேம்பாடு, ஹலால் தொழில் துறை உள்ளிட்ட புதிய
துறைகளில் மலேசியாவுக்கும் ருவாண்டாவுக்கும் இடையே வர்த்தக
உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும்
விவாதித்தனர்.


