அம்பாங், ஏப் 29- கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது
ஒற்றுமை அரசின் தேர்தல் இயந்திரத்திற்குக் கிடைத்து வரும்
நேர்மறையான ஆதரவு எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிடும் அளவீடாக
ஒருபோதும் கருத முடியாது.
முடிந்தவரை அதிகமான வாக்காளர்களைக் கவரும் இலக்கை
அடைவதற்கு ஏதுவாக தேர்தல் இயந்திரமும் பிரச்சார திட்டமிடலும்
சிறப்பாக இருப்பதை தாம் உறுதி செய்யவுள்ளதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பிரச்சார தினமான இரண்டாம் நாளான இன்று தொடங்கி மே 10 ஆம் தேதி
இரவு வரை நமது பிரச்சார நடவடிக்கைகளின் தீவிரம் நாளுக்கு நாள்
அதிகரித்த வண்ணம் இருக்கும் என்று என்று அவர் குறிப்பிட்டார்.
கோல குபு பாரு இடைத் தேர்தலில் பிரச்சாரத்தின் இரண்டாம் நாளான
நேற்று ஒற்றுமை அரசின் தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு உள்ளது என்று
நிருபர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
சொன்னார்.
முன்னதாக அவர் இங்குள்ள அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக
மண்டபத்தில் நடைபெற்ற உலு கிளாங் தொகுதி நிலையிலான நோன்புப்
பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டார்.
கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு.
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சுயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவும் பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட்டும், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடினும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின்னும் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதியில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பாளர்கள் இன்று தொடங்கி மே 10ஆம் தேதி நள்ளிரவு வரை 14
நாட்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் 39,362 பேர் சாதாரண வாக்காளர்களாவர். மேலும் 625
போலீஸ்காரர்கள் மற்றும் 238 இராணுவ வீரர்களும் அவர்களின்
துணைவியரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


