அம்பாங், ஏப் 29 - மாநில அரசின் நலத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதையும் மக்களின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்வதற்காக அத்திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
உதவி தேவைப்படும் தரப்பினர் பயன்பெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இதுபோன்ற திட்டங்கள் மிகவும் கவனமாகவும் முறையாகவும் அமல்படுத்தப்படுகின்றன என்று அவர் சொன்னார்.
என்னை சிலர் கருமி என்றும் நேர்மையற்றவர் என்றும் நலத்திட்டங்களை மீட்டுக் கொள்பவர் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில், நலத்திட்டங்களைப் பொறுத்தவரை முந்தைய ஆண்டுகளை விட கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளோம்.
நாங்கள் எதைக் குறைத்தோம் என்றால் இலவச நீர்த் திட்டத்தை கூறலாம். முன்பு நாங்கள் வீடுகள், சமூக சேவை மையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட அனைவருக்கும் இலவச தண்ணீர் வழங்கினோம். ஆனால், அதற்கு பதிலாக இப்போது உதவி தேவைப்படுபவர்களை மட்டும் இலக்காகக் கொள்கிறோம் என்று அமிருடின் கூறினார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற உலு கிளாங் தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் நலத் திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தபட்டு வருவதாகக் கூறிய அமிருடின், பிங்காஸ் எனப்படும் மக்கள் நல்வாழ்வுத் திட்டம், மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் (எஸ் எம்.யு.இ.), பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டம் போன்றவை அதில் அடங்கும் என்றார்.
கூடுதலாக, அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா திட்டத்திற்காக 1 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிலாங்கூர் மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


