உலு சிலாங்கூர், ஏப் 26: இந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கான பள்ளிப் பேருந்துக் கட்டண மானியத்தை வழங்க மாநில அரசு மொத்தம் RM1.1 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளிகள் பெரும்பாலும் மாநிலத்தின் உட்பகுதியில் அமைந்துள்ளதுடன், மாணவர்களின் குடும்பங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன என்று வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், உலு சிலாங்கூர் மாவட்டத்தைச் சுற்றி மொத்தம் 324 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் RM97,200 ஒதுக்கீட்டில் பள்ளி பேருந்து கட்டண மானிய வவுச்சர்களை பெற்றுள்ளனர்.
"இந்த உதவி பெரும்பாலும் B40 குடும்பங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது, காரணம் அவர்களில் பல பேர் தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்கிறார்கள்.
"இந்த உதவி தேர்தலுக்காக வழங்கப்படவில்லை. உண்மையில் ஒவ்வொரு ஆண்டும் எனது போர்ட்ஃபோலியோவின் கீழ் இந்த மானியத் திட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெறுநர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறோம், ஏனெனில் உதவி பெறும் மாணவர்கள் கட்டாயம் B40 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்திருக்க இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
நேற்று, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் கலந்து கொண்ட பள்ளிப் பேருந்துக் கட்டண மானியத் திட்டம் மற்றும் சிலாங்கூர் வறுமை ஒழிப்பு திட்ட நிகழ்விற்குப் பிறகு வீ.பாப்பாராய்டு இவ்வாறு கூறினார். இந்நிகழ்வு பத்தாங் காலி பொது மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கிடையில், துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்யும் கே சாந்தி (42), பெற்ற RM300 மானியம் தனது மகனின் பள்ளி வேன் கட்டணத்தை மூன்று மாத காலத்திற்கு ஈடுசெய்யும் என்றார்.
"பள்ளி வேனின் கட்டணம் ஒரு மாதத்திற்கு RM100 ஆகும். எனவே இந்த மானியம் மூன்று மாதத்திற்கு எனக்கு உதவி செய்யும் மற்றும் உணவு போன்ற பிற தேவைகளை வாங்குவதற்கு வழிவகை செய்யும்," என்று அவர் கூறினார்.
தனது மூன்று குழந்தைகள் பள்ளியில் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டியது இருப்பதாகவும், போக்குவரத்துத் துறை ஊழியர் (38) கே.கண்ணன் தெரிவித்தார்.
அதனால் பெறப்பட்ட உதவி அவர்களின் பள்ளிப் படிப்பை ஈடுகட்ட மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறினார்.
"ஒருவேளை சிலர் RM300ஐ சிறிய தொகையாகப் பார்க்கலாம், ஆனால் சிரமப்படும் எங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்" என்று அவர் கூறினார்.


