உலு சிலாங்கூர், ஏப் 26 - மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு
அமல்படுத்தியுள்ள அனைத்துத் திட்டங்களும் எல்லா இனங்களையும்,
சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களையும் உள்ளடக்கியதோடு
நீதியை அடிப்படையாகவும் கொண்டவையாகும் என மந்திரி புசார்
கூறினார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் இன முக்கியத்துவம்,
அல்லது குறிப்பிட்ட தரப்பினர், சமூகம் என்ற வரம்பிற்கு அப்பாற்பட்டு
அனைவரின் நலனையும் காப்பதை கொள்கையாகக் கொண்டு மாநில அரசு
செயல்பட்டு வருகிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த மாநிலம் அனைவருக்குமானது. அனைவரின் நலன் காப்பதற்கும்
நன்மை செய்வதற்கும் முயன்று வரும் அரசாங்கமாக இது விளங்குகிறது
என்று அவர் தெரிவித்தார்.
மலாய்க்காரர் என்ற முறையில் நான் மலாய்க்காரர் மற்றும் இஸ்லாம்
மீது மட்டும் கவனம் செலுத்துவதில்லை. நண்பர்களாகவும் குடும்ப
உறுப்பினர்களாகவும் நான் கருதும் சீன மற்றும் இந்திய சமூகங்களின்
நலனையும் காத்து சிலாங்கூரில் அவர்கள் அமைதியுடன் வாழ்வதற்குரிய
சூழலை ஏற்படுத்தித் தருவதில் கவனம் செலுத்துகிறேன் என்றார் அவர்.
பத்தாங் காலி சமூக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்ப்பள்ளி
மாணவர்களுக்கான பேருந்துக் கட்டணம் கட்டண ஒப்படைப்பு மற்றும்
சிலாங்கூர் வறுமை ஒழிப்பு புளுபிரிண்ட் உதவித் திட்டத்தை தொடக்கி
வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து மக்களும் தங்கள் வாழ்க்கையைச் சரி செய்து ஒன்றிணைந்து
முன்னேறுவதற்கு ஏதுவாக மாநில அரசு விரிவான மற்றும்
சமநிலையான கொள்கைகளை முன்வைத்து நிர்வாகம் செய்து வருகிறது
எனவும் அவர் குறிப்பிட்ட்டார்.
அனைவருக்கும் நியாயமும் சமமான வாய்ப்பும் கிடைப்பதற்கு ஏதுவாக
மாநிலத்தின் அனைத்து மக்களின் நலன் காக்கப்படுவதையும் நிர்வாகம்
முறையாகச் செயல்படுவதையும் உறுதி செய்யும் பொறுப்பு மாநிலத்தின்
தலைவர் என்ற முறையில் எனக்கு உள்ளது என்றார் அவர்.
இந்த அரசாங்கம் வாக்குறுதி அளிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை.
மாறாக, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என பேதம் பார்க்காமல்
அனைத்து மக்களின் நலனையும் காக்கும் ஆற்றல் கொண்ட அரசாங்கம்
என்பதை அரசு நிரூபித்துள்ளது என அமிருடின் சொன்னார்.


