குவா முசாங், ஏப் 24: கடந்த ஞாயிற்றுக்கிழமை கெமமான் திரங்கானுவில் உள்ள தொடக்கப் பள்ளியின் ஆண் ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர் ஒருவரை அடித்ததாக நம்பப்படும் வழக்கை விசாரிக்க கல்வி அமைச்சகம் காவல்துறையிடம் கேட்டு கொண்டது.
இந்த வழக்கு தொடர்பாக தனது அமைச்சகம் காவல்துறைக்கு ஒத்துழைக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் கூறினார்.
"வழக்கு விசாரணையில் உள்ளது. காவல்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையாக இணங்குவோம்," என்று விசாரணையின் முன்னேற்றம் குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, 49 வயதான ஆண் ஆசிரியர் இரவு 9.30 மணியளவில் ஆசிரியர் குடியிருப்பில் கைது செய்யப்பட்டதாகத் திரங்கானு காவல்துறைத் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பள்ளி மாணவர்கள் திரவ வகை மேஜிக் காளான் பயன்படுத்தி வேப்பிங் செய்யும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஃபத்லினா, இந்த விஷயம் தனது தரப்பின் கவனத்தில் இருப்பதாக கூறினார்.
பள்ளியில் மாணவர்கள் புகைபிடித்தால், ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் பெற்றோர்களால் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- பெர்னாமா








