கோலாலம்பூர், ஏப் 24 - அடுத்த பத்தாண்டுகளில் நீர் சேவைத் துறையில் உருமாற்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக கட்டமைப்பை உருவாக்குவதில் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு (பெட்ரா), தேசிய நீர் சேவைகள் ஆணையத்துடன் (ஸ்பான்) இணைந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் உள்ளீடு மற்றும் கருத்துக்களை பெறுவதற்காக பங்களிப்பாளர்கள் மற்றும் மலேசிய நீர் சங்கம் உள்ளிட்டத் தரப்பினரை ஈடுபடுத்த அமைச்சு உத்தேசித்துள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்தார்.
நீர் சேவைத் துறையில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் அத்துறையை இலக்கவியல் மயமாக்கல் மற்றும் ஏ.ஐ. பயன்பாட்டை அதிகரிப்பது போன்ற சில குறிப்பிடத்தக்க பரிசீலனைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என அவர் கூறினார்.
அதேபோல், நீர் வள மேலாண்மை மற்றும் செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முக்கியமானவையாக இருக்கும். வருவாய் மேலாண்மை மற்றும் நீர் சேவைத் துறையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் நடத்துநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற எம்.டபள்யு.ஏ.36 வது ஆண்டு இரவு உணவு மற்றும் விருதளிப்பு நிகழ்வை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் துணைப் பிரதமருமான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீர் சேவைத் துறையின் விநியோகத்தை சீர்திருத்துவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறிய அவர், இந்நோக்கத்தை அடைய மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து நிலைகளிலும் உள்ள பங்களிப்பாளர்களின் ஒத்துழைப்பும் தேவை என்றார்.


