ஷா ஆலம், ஏப் 23: கிள்ளான் அருகே உள்ள பண்டார் சுல்தான் சுலைமான் தொழிற்பேட்டையில் உள்ள கால்நடை தீவனப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 3 வெளிநாட்டவர்கள் உட்பட 4 தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டனர்.
பிற்பகல் 2.12 மணிக்கு இச்சம்பவம் பற்றிய அழைப்பு வந்ததையடுத்து, தெற்கு கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) ஐந்து உறுப்பினர்கள் ஒரு இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிலாங்கூர் மலேசியா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாடுகள் மற்றும் தீயணைப்பு உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். .
எனினும் தீயணைப்பு படையினர் தொழிற்சாலைக்கு வருவதற்குள் சேமிப்பு தொட்டியில் ஏற்பட்ட தீ அணைக்கப் பட்டதாக அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் 10 முதல் 60 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டது என்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், மற்றொரு சம்பவத்தில் அதிகாலையில் போர்ட் கிள்ளானில் உள்ள சோலோக் செலாத்தான் 21ல் உள்ள மூன்று தொழிற்சாலைகள் தீயில் எரிந்து நாசமாகின.
பிளாஸ்டிக் பொருட்களை பதப்படுத்தும் தொழிற்சாலை 80 சதவீதம் எரிந்து அருகில் உள்ள மற்ற இரண்டு தொழிற்சாலைகளுக்கு தீ பரவியது.
அதிகாலை 2.16 மணிக்கு தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், மொத்தம் 54 உறுப்பினர்கள் 11 இயந்திரங்களுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாகவும் அஹ்மட் முக்லிஸ் கூறினார்.
“ஒவ்வொரு தொழிற்சாலையும் 8,400 சதுர அடி பரப்பளவு கொண்டது. அதிகாலை 5.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது," என்று அவர் கூறினார்,
இத்தீ விபத்தில் காயங்கள் அல்லது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
– பெர்னாமா


