ஷா ஆலம், ஏப் 23 - ஜெர்மனியில் நடைபெறும் அனைத்துலக
நிலையிலான பிரசித்தி பெற்ற பொறியியல் தொழில்நுட்ப, இயந்திரவியல்
மற்றும் மின்னியல் மாநாடான ‘ஹென்னோவர் மெஸ்ஸி‘யின் தொடக்க
விழாவில் கலந்து கொள்ளும் மலேசியாவின் ஒரே மாநிலமாகச் சிலாங்கூர்
விளங்குகிறது.
சிலாங்கூர் மாநிலத்திற்கும் மலேசியாவுக்கும் தேவைப்படும்
நிபுணத்துவத்தையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு வருவதற்கு இந்த
நிகழ்வு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
உலகின் பிரசித்தி பெற் நிறுனங்களான மைக்ரோசோப்ட், கூகுள்,
அமேசோன் இணையச் சேவை, டெல், ஏஸ்ஏபி, சீமேன்ஸ், போஷ் மற்றும்
உலகம் முழுவதும் உள்ள தொடக்க நிறுவனங்கள் பங்கு கொள்ளும் இந்த
மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு,
காலநிலை நட்புறவு உற்பத்தி மற்றும் பசுமைத் தொழில்நுட்பத் தீர்வு
ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மற்றும் மலேசியாவுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் மற்றும்
நிபுணத்துவத் கொண்டு வருவது எங்களின் தலையாய நோக்கமாகும் என
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்தார்.
இந்த மாநாட்டையொட்டி நடைபெறும் ஆய்வரங்கில்
தென்கிழக்காசியாவின் இதர மூன்று பேராளர்களுடன் அமிருடினும்
பங்கேற்கிறார். ஆசியானின் ஆக்கத்திறன் இலக்கை மேம்படுத்துவதில்
அரசாங்கம் மற்றும் தொழில்துறையின் ஒத்துழைப்பு குறித்து அவர்
உரையாற்றுவார்.
தொழில்திறன் மற்றும் தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சியில்
முன்னோடி மாநிலமாக விளங்குவதில் சிலாங்கூரின் திட்டங்கள் மற்றும்
அது எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அமிருடின் எடுத்துரைப்பார்.


