குவாந்தான், ஏப் 21: நேற்று ஜாலான் பத்து பாலாய்-ஜெராண்டுட் கிலோமீட்டர் 9 இல் நடந்த சாலை விபத்தில் கம்போங் பத்து பாலாயில் உள்ள தனது வருங்கால மனைவியின் வீட்டிற்கு மதிய உணவுக்காகச் சென்று கொண்டிருந்த இளைஞர் மரணம்.
மதியம் 1 மணியளவில் நடந்த இந்த விபத்தில், கோத்தா பாரு, கிளந்தனில் உள்ள தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அஹ்மட் சோலிஹின் ஃபசுனி (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என லிபிஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் இஸ்மாயில் மான் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், அந் நபர் எதிர்திசையில் வந்த லாரியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
லாரியை 40 வயதான உள்ளூர் நபர் ஓட்டிச் சென்றுள்ளார். அவர் ஜெங்கா, மாரானிலிருந்து குவா மூசாங், கிளந்தானை நோக்கி செம்பணை குலைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும், சம்பவத்தைப் பார்த்த தரப்பினர் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும் இஸ்மாயில் கூறினார்.
– பெர்னாமா


