உலு சிலாங்கூர், ஏப் 22: அம்னோ இப்பொழுது ஒரு அதிகார கேந்திரமாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப அதை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் என்று அதன் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
"நாம் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இல்லை, அதனால் நாம் அரசியல் எல்லையின் இறுதியிலும் இல்லை. இது ஒரு சோதனையான காலகட்டம், விடாமுயற்சி மற்றும் போட்டித் திறனுடன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் மாற வேண்டும், என்று உலு சிலாங்கூர் அம்னோ ஏற்பாடு செய்திருந்த ஐடில்பித்ரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில், அம்னோ 26 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் அதன் மோசமான அடைவு நிலை தொடர்ந்தது. போட்டியிட்ட 108 இடங்களில் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இருப்பினும், அம்னோவின் நிறைகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று துணைப் பிரதமர் ஜாஹிட் கூறினார். மக்களவையில் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது குறைவான இடங்கள் இருந்த போதிலும், அதன் எம்.பி.க்களில் ஏழு பேர் மந்திரிகளாக்கப் பட்டனர்.
"அம்னோவையும் பாரிசான் நேசனலையும் பிரதமர் இன்னும் அங்கீகரிப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார். ``இப்போது அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், நாம் தொடர்ந்து களத்தில் இருக்க இப்பொழுது நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க , நாம் மாறியாக வேண்டும்’’ என்று அவர் கூறினார்.
சில கட்டங்களில் "சிக்கல்" இருந்தபோதும், அம்னோ சோர்வடையக் கூடாது. "நாம் அதிகமாக கோர விரும்பினால், முதலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்," என்று அவர் கூறினார்.
மற்ற அரசாங்கக் கட்சிகளுடன் அம்னோ கொண்டுள்ள கருத்து வேறுபாடுகளைப் பெரிதாக்க வேண்டாம் என்று ஜாஹிட் கூறினார்.
"நாங்கள் எதிர்க்கட்சி அல்ல," . அதனால்தான் அம்னோ மாநில மற்றும் மத்திய நிலைகளில் ஒற்றுமை அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது.
அம்னோவில் ஈடுபட்டுள்ள சர்ச்சைகள் குறித்த விவரங்களுக்கு அவர் செல்லவில்லை என்றாலும், ஒரு கடையில் “அல்லாஹ்” என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனை போன்ற சர்ச்சைகளில் டிஏபி போன்ற கட்சித் தலைவர்களுடன் முரண்பாடு ஏற்படுத்தும் அளவுக்கு அரசியல் விமர்சனங்களை சில அம்னோ தலைவர்கள் முன்னெடுத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.


