அலோர் ஸ்டார், ஏப் 22- சங்லுனில் உள்ள லாக்கா செலத்தான் தேசிய
பள்ளியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து வகுப்பறைகள் அழிந்தன.
இந்த தீவிபத்து தொடர்பில் நேற்று மாலை 3.09 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து சுமார் 12 நிமிடங்களில் தீயணைப்புக் குழுவினர்
சம்பவ இடத்தை அடைந்ததாகப் புக்கிட் காயு ஹீத்தாம் தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் தீயணைப்பு உதவி ஆணையர் ஜூல்கிப்ளி மானாப்
கூறினார்.
புக்கிட் காயூ ஹீத்தாம் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 20
உறுப்பினர்களோடு சங்லுன் மற்றும் பெர்லிஸ் மாநிலத்தின் ஆராவ்
தன்னார்வ தீயணைப்புக் குழுவினரும் தீயை அணைக்கும் பணியில்
இணைந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தை அடைந்த போது அப்பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது
மாடியுள்ள சில வகுப்பறைகளில் ஏற்பட்ட தீ பள்ளியின் கூரைக்கும்
பரவியதை தீயணைப்பு வீரர்கள் கண்டதாக அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
இந்த தீவிபத்தில் ஐந்து வகுப்பறைகள் 70 விழுக்காடு சேதமடைந்தன.
எனினும் அனைத்து மாணவர்களும் பள்ளி முடிந்து வீடு திரும்பி
விட்டதால் இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றார்
அவர்.
இந்த தீவிபத்தை பள்ளியின் பாதுகாவலர் கண்டு தீயணைப்புத் துறைக்கு
தகவல் கொடுத்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாலை 4.30 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட
வேளையில் தொடர் தீச்சம்பவங்கள் ஏற்படாமலிருப்பதை உறுதி
செய்வதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.


