புத்ராஜெயா, ஏப் 19- மனைவி, மகன் மற்றும் போலீஸ்காரர் ஒருவரை தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தததைத் தொடர்ந்து விமானச் சரக்கு பட்டுவாடா நிறுவன நிர்வாகி
ஒருவர் நேற்று தொடங்கி ஈராண்டுச் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார்.
உயர் நீதிமன்றம் வழங்கிய குற்றத் தீர்ப்பு மற்றும் சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜி. ஸ்ரீதரன் என்ற அந்த ஆடவர் செய்திருந்த மேல்முறையீட்டை
நீதிபதிகள் டத்தோ ஹடாரியா சைட் இஸ்மாயில், டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ அஸ்மி அரிஃபின் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு நிராகரித்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது மற்றும் துல்லியமானது என்று நீதிபதி ஹடாரியா தனது தீர்ப்பில் கூறினார்.
மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை ஜாமீனில் இருப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்த நீதிபதி, ஸ்ரீதரனை சிறையில் அடைப்பதற்கான கைது ஆணையும் பிறப்பித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி ஜாலான் மாவார் 5சி, தாமான் மாவார், சிப்பாங் எனும் முகவரியில் உள்ள ஒரு வீட்டில் ஏ. கோகிலவாணி (வயது 47), மற்றும் அவர்களது மகன் எஸ். விஷால் ராஜ் (வயது 20) மற்றும் ஒரு போலீஸ்காரரை காயப்படுத்தியதாக கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டில் 47 வயதான ஸ்ரீதரன் நிரபராதி என கடந்த 2019 டிசம்பர் 30ஆம் தேதி சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும் கடந்த 2021 அக்டோபர் 6ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த ஷா ஆலம் உயர் நீதிமன்றம், ஸ்ரீதரன் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
மனைவியை காயப்படுத்தியதற்காக அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் மகனைக் காயப்படுத்தியதற்காக மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2021 அக்டோபர் 6 ஆம் தேதி முதல் தண்டனையை ஏககாலத்தில் நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.


