கோலாலம்பூர், ஏப் 16- மத்திய கிழக்கு நெருக்கடியின் எதிரொலியாகச்
சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மலேசிய மாணவர்களை தாயகம்
கொண்டு வருவது உள்பட அவசியமாக எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட
நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் உயர்
கல்வியமைச்சு விவாதிக்கவுள்ளது.
தற்போதை தரவுகளின் படி ஜோர்டானில் 1,872 மலேசிய மாணவர்களும்
சிரியாவில் 37 மாணவர்களும் ஈரானில் எட்டு மாணவர்களும் உள்ள
வேளையில் லெபனான் மற்றும் ஈராக்கில் யாரும் பயிலவில்லை என்று
உயர் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட மத்தியக் கிழக்கு நெருக்கடியை
உயர் கல்வியமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது. இந்த பிரச்சனை
ஜோர்டான், சிரியா, ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளுக்கும்
மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அது உணர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள மலேசிய மாணவர்களின் நலனை உறுதி
செய்வதற்காகக் கல்வியமைச்சு ஜோர்டான் மற்றும் துபாயில் உள்ள
மலேசிய கல்வி அலுவலகம் வாயிலாகவும் ஈரான் நாட்டின் தெஹ்ரான் ,
ஜோர்டான் நாட்டின் அம்மான் ஆகிய நகரங்களில் உள்ள மலேசியத்
தூதரகங்களைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது என
அவ்வறிக்கை குறிப்பிட்டது.
சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மலேசிய மாணவர்கள் அமைதியுடன்
எச்சரிக்கையுடனும் இருக்கும் அதே வேளையில் அதிகாரிகளின்
உத்தரவுகளையும் பின்பற்றி நடக்கும்படி அமைச்சு கேட்டுக் கொண்டது.


