சிப்பாங், ஏப் 15- பொது மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிர்பந்தத்தம் காரணமாக இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) முதலாவது முனையத்தில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரைக் கைது செய்வதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் விளக்கினார்.
மக்கள் ஒன்று கூடும் இடமாக விமான நிலைய பகுதி விளங்குவதால் சம்பவத்தின் போது சந்தேக நபரை நெருங்கும் அணுகும் முறை பயன்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.
துப்பாக்கி ஏந்திய சந்தேக நபரை மடக்கிப் பிடிப்பதைவிட அவரை (சந்தேக நபரை) அப்பகுதியிலிருந்து வெளியேற்றி பொதுமக்களைக் காப்பாற்றுவது சிறந்த நடவடிக்கையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு கே.எல்.ஐ.ஏ. மாவட்ட காவல்துறைத் தலைவரின் பதவி ஏற்பு மற்றும் ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
விமான நிலைய காவல் துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைகள் விரைவாகவும் சிறப்பானதாகவும் இருப்பதாக தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
நாங்கள் அவருடன் (சந்தேக நபருடன்) மல்லுக்கட்டியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். அவர் துப்பாக்கிச் சூடு நடத்திருக்கக்கூடும். அது ஒரு பொது இடம் என்பதால் அங்கு ஏராளமான மக்களும் சிறார்களும் இருந்தனர் என்று அவர் கூறினார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரின் சமீபத்திய நிலை குறித்து கேட்ட
போது அவரின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதோடு தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக ஹுசேன் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரின் மனைவியின் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்தார்.








