செமினி ஏப்.14- சித்திரை புத்தாண்டையொட்டி செமினி விஷ்ணு தேவ் தலைமையில் ஆண்டுதோறும் நடந்து வரும் நிகழ்வில், சிலாங்கூர் மாநில சமூக நல மற்றும் தொண்டூழிய மேம்பாட்டு இயக்கம் (சிலாங்கூர் வேஃப்) தனது உறுப்பினர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 150 பெண்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்பு பலகாரங்களை வழங்கியது.
இயக்க உறுப்பினர்களின் தாய்மார்கள் மற்றும் மனைவிமார்களைச் சிறப்பிக்கும் பொருட்டு அவர்களுக்கு சேலைகள், இனிப்பு பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டதாக இவ்வியக்கத்தின் ஆலோசகர் ராஜன் முனுசாமி கூறினார்.
நாட்டில் உள்ள இந்தியர்கள் வணிகத்தில் வெற்றி பெற பல்வேறு உதவி மற்றும் ஊக்குவிப்பு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. அவை ஆங்காங்கே உள்ள அரசியல் சமூக இயக்கங்களின் வழி மக்களுக்கு சென்று சேர வேண்டும்.
இங்குள்ள இளம் வணிகர்களுக்கு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு பயிற்சி மற்றும் உதவி திட்டங்களை ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம்.
செமினி வாழ் மகளிர் அமானா இக்தியார், தெக்குன் போன்ற தேசிய நிலை உதவி திட்டங்களுடன், மாநில அரசாங்கத்தின் ஐசிட், சித்தம், ஹிஜ்ரா உள்ளிட்ட அனைத்து உதவி திட்ட வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களிடையே நிலவும் ஏழ்மையை துடைத்தொழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வணிக மேம்பாடு , பயிற்சி மற்றும் உபகரண உதவிகள் அரசாங்கம் வழங்கி வருகிறது.
இவ்வேளையில் பிரதமர் வழங்கி வரும் பல்வேறு கடனுதவி திட்டங்களுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக, இந்திய மகளிர் தொழில் முனைவோருக்கான அமானா இக்தியார் மலேசியா நிதியத்தின் வாயிலாக கூடுதலாக 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.இதற்காக டத்தோ ரமணனுக்கு நன்றியையும் பாராட்டையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே, சிலாங்கூர் வேஃப் உறுப்பினர்கள் சுற்று வட்டார மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருவதோடு தனது அரசியல் பயணத்திற்கு இவர்கள் முக்கிய பங்காற்றி வருவதாகவும் உலு லங்காட் பிகேஆர் தொகுதி தலைவருமான ராஜன் சுட்டிக் காட்டினார்.
செமினி சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராமச்சந்திரன் அர்ஜூனன், சந்திரன் ராமசாமி மற்றும் செமினி கிராமத் தலைவர் நடேசன் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்தனர்.








