இஸ்தான்புல் - தெற்கு துருக்கிய மாகாணமான அன்டலியாவில் கேபிள் கார் கேபின் உடைந்த மின்கம்பத்தில் மோதியதில் வெள்ளிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 5.23 மணியளவில் இருபத்தி நான்கு கேபின்கள்(அறைகள்) அந்தரத்தில் சிக்கித் தவித்தன.
மீட்பு பணி தொடங்கிய பதினாறு மணிநேரத்தில் நூற்றி பன்னிரண்டு பேர் மீட்கப்பட்டனர். ஆனால் ஒன்பது கேபின்களில் 60 க்கும் மேற்பட்டோர் இன்னும் ஆகாயத்தில் சிக்கியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீட்புக்கு காத்திருக்கும் நபர்களில் எவருக்கும் ஆபத்தான காயங்கள் இல்லை அல்லது உடல்நிலையில் பாதிப்பில்லை என்று பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஓகே மெமிஸ் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார், சூரிய அஸ்தமனத்திற்கு முன் மீட்பு பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளோம் என்றார்.
சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிக்கையில், ஏழு ஹெலிகாப்டர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோவில், மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பு கயிறுகள் கட்டி கேபின் அறைகளில் ஏறுவதைக் காட்டுகிறது.
அதன் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, கேபிள் காரில் தலா ஆறு பேர் இருக்கக்கூடிய 36 கேபின்கள் உள்ளன, மேலும் அன்டலியா நகரத்தின் பரந்த காட்சிகளுடன் டுனெக்டெப் வசதிக்கு மேல்நோக்கிச் செல்ல சராசரியாக ஒன்பது நிமிடங்கள் ஆகும்.








