சுங்கை பட்டாணி, ஏப் 11- நேற்று மாலை இங்கு வீசிய பலத்த புயல்காற்றில் மூன்று கிராமங்களிலுள்ள ஐந்து வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.
எனினும், இந்த சம்பவத்தில் அந்த வீடுகளைச் சேர்ந்த 17 குடியிருப்பாளர் களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கோல மூடா மாவட்ட பொது தற்காப்புப் படையின் அதிகாரி கேப்டன் அஸார் அகமது கூறினார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த புயல் முதலாவது சம்பவத்தில் 31 வயது ஆடவர் வசித்து வரும் வீட்டின் கூரை பறந்தது.
சுமார் அரை மணி நேரம் கழித்து அதாவது மாலை 5.00 மணியளவில் கம்போங் பெர்மாத்தாங் பாசீரிலுள்ள வீடுகளை இரண்டாவது புயல் சம்பவம் உலுக்கியது. இந்த சம்பவத்தில் அறுவர் வசித்து வரும் ஒரு வீடு பாதிக்கப்பட்டது.
மூன்றாவது சம்பவம் கம்போங் அலோர் பெம்பானில் மாலை 6.00 மணிக்கு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் வசித்து வரும் மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதோடு தற்காலிக நிவாரண மையம் எதுவும் திறக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் சார்பில் அவசர உதவிப் பொருள்களும் உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன என்றார் அவர்.








